எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

காட்டாங்குளத்தூர், 12 ஜனவரி 2026:

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவன வேந்தரும் தமிழ்ப்பேராயப் புரவலருமான டாக்டர் தாஇராபாரிவேந்தர்அவர்களின் விருப்பப்படி கடந்த 4 ஆண்டுகளாகத் தமிழ்ப்பேராயம் சார்பில் பொங்கல் விழா மாபெரும் விழாவாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 12.01.2026 திங்கட்கிழமையன்று பொங்கல் விழா காட்டாங்குளத்தூர் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

            காலை 9 மணியளவில் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்திலிருந்து தொடங்கிய கலைப்பேரணி நாதஸ்வரம், பறையிசை, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு சுமார் 2000 பேர் பங்கேற்க, அப்பேரணி பொங்கல் விழா நடைபெறும் விளையாட்டுத் திடலை அடைந்தது. அதன்பிறகு அங்கு மாணவ – மாணவியர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றன. உறியடி, கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் ஆசிரியர் – ஆசிரியரல்லாத ஊழியர் – மாணவர்கள் ஆகியோர் பெருமளவில் பங்கேற்றனர்.

            அதன்பிறகு நடைபெற்ற நிறைவு விழாவில் திருமதி பத்மபிரியா ரவி மற்றும் திருமதி மணிமங்கை சத்தியநாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.

            இறுதியில் சிறப்புரையாற்றிய டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழ்ப்பேராயத்தைப் பாராட்டினார். இதுபோன்ற விழாக்களின் மூலம் மாணவர்களின் கலைத் திறமைகள் வெளிப்படுவதோடு, நமது பாரம்பரியம், கலை, பண்பாட்டுச் சிறப்புகளை அனைவரும் அறிவதற்குப் பெரிதும் பயன்படுகிறது என்றும், இது ஓர் ஒருமைப்பாட்டு உணர்வைக் காட்டும் விழா என்றும் கூறினார். விழாவில் துணைவேந்தர், இணைத் துணைவேந்தர், பதிவாளர், தமிழ்ப்பேராயத் தலைவர், வளாக நிர்வாகி மற்றும் இயக்குநர்கள், புலத் தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்று அவ்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர்.