பொய்யாமணி ஸ்ரீ ஸாயி பாபா ஆலயத்தில்ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிகள் உருவ சிலை திறப்பு

பொய்யாமணி ஸ்ரீ ஸாயி பாபா ஆலயத்தில்ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிகள் உருவ சிலை திறப்பு

தமிழ்நாட்டில் பட்டிதொட்டி எங்கும் ஷீரடி ஸாயி பாபாவின் ஆலையங்கள் அமைய, ஷீரடி ஸாயி பாபவின் தீவிர பிரச்சாரவாதியாக திகழ்ந்தவர் ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிகள். இவர் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், பொய்யாமணி கிராமத்தில் 1906ம் ஆண்டு பிறந்தார். ஊட்டி ரேஸ் கோர்ஸில் பணியாற்றினார். பின்பு ஷீரடி ஸாயி பாபாவின் தீவிர பக்தரானார். பெங்களூரில் ஸ்ரீ ஸாயி ஸ்பிரிச்சுவல் சென்டர் என்ற டிரஸ்டை தொடங்கினார். இவரின் குருவான ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுடன் இணைந்து சென்னை மயிலாப்பூரில் ஸாயி பாபா கோவிலை நிறுவி, அதன் தலைவராக பல ஆண்டுகள் இறை தொண்டாற்றினார். 1980-ல் இயற்கை எதினார்.

தற்போது ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிகள் பிறந்த ஊரான பொய்யாமணியில், பெங்களூரின் ஸ்ரீ சாயி ஸ்பிரிச்சுவல் டிரஸ்ட், பொய்யாமணி ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிகள் ஸ்டிரஸ்ட் உதவியுடன் பொய்யாமணி கிராமத்தில் அழகிய ஸாயி பாபா கோவில் 2019.ல் கட்டியது. தற்போது கோவில் அருகில் உள்ள மறைந்த ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிகள் வீட்டின் முன்பகுதியில் அவரது திருவுருவ சிலையை 2023 ஏப்ரல் 16 (இன்று) திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் டிரஸ்டி கிருஷ்ணகுமார், சாயி ஸ்பிரிச்சுவல் மையத்தின் செயலாளர் சேகர், ஊராட்சி மன்ற தலைவர் பாலன் மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பொய்யாமணி ஸாயி பாபா ஆலயத்தில் மூலவராக ஷீரடி ஸாயி பாபா, இடது புறத்தில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி, வலது புறத்தில் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிகள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிரே ராதே கிருஷ்ணா சிலைகளும், புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமியின் இல்லத்தில் அவரின் போதனைகள் நிறைந்த தியான அறை, கோவிலின் முகப்பில் செயற்கை தாமரை நீரூற்று, கோவில் பின்பு சமையல் கூடம், பங்கதர்கள் தங்கும் அறை, கோவிலை சுற்றிலும் ரம்யமான இயற்கையான சூழல், சுத்தமான காற்றோட்டம் என மனதுக்கு அமைதி கொடுக்கும் வகையில் ரம்மியமாக அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய கோவில் டிரஸ்டி கிருஷ்ணகுமார், நாங்கள் ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிகளின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு மேற்படி டிரஸ்ட்டை நிறுவி, கோவிலில் தினமும் மதியம் நோரம் அண்ணதானம், இங்குள்ள அரசு பள்ளியில் கணிணி லேப், ஸ்மார்ட் வகுப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாணவ மாணவிகளுககு தனித்தனியே கழிப்பறைகள், தரைதளம் அமைத்தது போன்ற பணிகளை செய்துதந்துள்ளோம். கிராம பெண்களின் தொழில் வளர்ச்சிக்காக மாடு வளர்த்தல், பண்ணை அமைத்து விவசாயம் செய்வது போன்றவற்றை ஏற்படுத்தி கொடுத்து இந்த கிராம மக்களுக்கு சில சமூக தொண்டுகளை செய்து வருகிறோம்.

மேலும் வரும் காலங்களில் 5 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை, மாணவர்கள் பயன்பெரும் வகையில் மேல்நிலை பள்ளிக்கூடம், மேல் படிப்பிற்காக வெளியூர் செல்லும் பெண் குழந்தைகளுக்கு போக்குவரத்து வசதி, சமுதாய கூடம் போன்ற கிராமத்தின் வளர்ச்சி உதவும் வகையில் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என தெரிவித்தார்.